வவுனியாவில் புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு (Photos)
அனுராதபுரம் - வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு வவுனியா விஜயபாகு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (11.04.2023) அங்கு நடைபெற்ற திருத்த வேலைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிராமத்தின் பிரதான பாதை மறைப்பு
வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த கிராம மக்களை அப்பாதையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 32 வருடங்களாக பயன்படுத்தி வரும் பாதையை தாம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் போக்குவரத்திற்கு ஏற்றதாக புதிய தண்டவாளங்களை அமைக்குமாறும் அப்பகுதி மக்கள் புகையிரத திணைக்களத்தினரிடம் கோரினர்.
அதற்கு அவர்கள் இணங்காத காரணத்தினாலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
திருத்தப்பணிகள் இடைநிறுத்தம்
பொலிஸார் தலையிட்டு குறித்த விடயம் தொடர்பில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அந்த மக்களின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்குமாறும் கோரியுள்ளனர்.
இதனால் அனுராதபுரம் - வவுனியா வரையிலான புகையிரதப் பாதை திருத்தப் பணிகள் ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, தமக்கான தீர்வு கிடைக்காவிடின் தாம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
