வவுனியாவில் மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் : பெற்றோர்களுக்குப் ஒரு வார கால அவகாசம்
பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கை
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று(15.07.2026) நடைபெற்ற விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் கலந்துகொண்ட வவுனியா போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தகுந்த தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களுக்கான தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஒரு வார கால அவகாசம்
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க,
இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் மோட்டார் சைக்கிள்களில் அழைத்து வரப்படும் அனைத்துச் சிறுவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பிரத்யேகத் தலைக்கவசம் அணிவிக்கப்பட வேண்டும்.

இந்த ஒரு வார கால அவகாசம் நிறைவடைந்த பின்னர், விதியை மீறும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகின்றன. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் சிறுவர்கள் பாரிய தலைக்காயங்களுக்கு உள்ளாகி, உயிரிழக்கும் அல்லது நிரந்தரப் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
இதன் காரணமாகவே வவுனியா போக்குவரத்து பொலிஸார் இந்த விசேட அதிரடிப் பரிசோதனையையும் விழிப்புணர்வையும் ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும். இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஓட்டுநர் மட்டுமன்றி, பின்னால் பயணிக்கும் நபரும் (அவர் சிறுவராக இருந்தாலும்) தரச்சான்றிதழ் பெற்ற தலைக்கவசத்தை அணிவது கட்டாயமாகும்.

அத்துடன் இலங்கையில் பதிவாகும் மொத்த வீதி விபத்துக்களில் 40 வீதத்துக்கும் அதிகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகவே உள்ளன.
காலை வேளையில் பாடசாலைக்கு அவசரமாகப் பிள்ளைகளை அழைத்து வரும்போது, பெற்றோர்கள் கவனக் குறைவாக முந்திச் செல்ல முற்படுவதால் பாடசாலை வலயங்களுக்கு அருகிலேயே அதிக விபத்துகள் ஏற்படுவதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.


