அமெரிக்க தூதுவர் குஷ்னர் பிரான்ஸ் அமைச்சர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதி மறுப்பு
பிரான்ஸில் கொல்லப்பட்ட தீவிர வலதுசாரி ஆர்வலர் குறித்த விவகாரத்தில், அமெரிக்க தூதுவர் சார்லஸ் குஷ்னர் (Charles Kushner) அந்நாட்டு அமைச்சர்களைச் சந்திக்க பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
பாரிஸில் உள்ள ஐரோப்பா மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று விளக்கம் அளிக்க நேரில் வராததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், பிரான்சின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடும் வகையில் கருத்து தெரிவித்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
பிரான்ஸ் அரசு
சமீபத்தில் பிரான்சில் குவென்டின் டெரான்கே என்ற 23 வயது வலதுசாரி ஆர்வலர், இடதுசாரி ஆதரவாளர்களுடனான மோதலில் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், பிரான்சில் "தீவிர இடதுசாரி வன்முறை" அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
இந்தப் பதிவை பாரிஸில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் பகிர்ந்தது பிரான்ஸ் அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
தூதரகப் பணி
இது குறித்து விளக்கம் அளிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் விடுத்த அழைப்பை நிராகரித்த குஷ்னர், தனக்குப் பதிலாக உயர் அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்தார்.

தூதரக மரபுகளை மீறிய இந்தச் செயலால் அதிருப்தியடைந்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், இனி குஷ்னர் பிரான்ஸ் அமைச்சர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.
இருப்பினும், அவர் தனது தூதரகப் பணிகளைத் தொடரலாம் என்றும் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வர்த்தக வரிகள், உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்வதில் ஐரோப்பாவின் பங்கு போன்ற பல விவகாரங்களில் பாரிஸுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது.