ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது! மீண்டும் ஏமாற்றிய அரசாங்கம்
இலங்கையில் கடந்த 24 வருடங்களாக தீர்க்கப்படாமல் காணப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வை வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம் என ஸ்ரீலங்கா அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா அமைச்சரவையின் நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு விடயம் குறித்து தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டால் அது ஏனைய அரச சேவை ஊழியர்களின் இணையான சேவைகளையும் பாதிக்கும்.
எனவே, முழு அரச சேவைத் தொடர்பிலும் சிந்தித்து அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து பொதுச் சேவைகளுக்கும் நியாயத்தை வழங்கும் வகையில் நிரந்தரத் தீர்வை வழங்குவதே அமைச்சரவையின் தீர்மானம்.
நாட்டின் தற்போதைய கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, அனைத்து அரசாங்க வருமானமும் சரிந்துவடைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வாழ வைப்பது அவசியம். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவைகளை அமைச்சர்கள், பாராட்டியுள்ளதோடு, மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.
நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவதே அமைச்சரவையின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
