சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்! உயிருக்கு போராடும் பொது மக்கள்
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழையால் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 நாட்களில் மட்டும் அங்கு 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் இவ்வாறு கடும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் ஜென்சூ நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக வணிக வளாகங்கள், பாடசாலைகள் மற்றும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுரங்க பாதைகளில் பலரும் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் தோள்ப்பட்டை அளவுக்கு வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலர் கைக்குழந்தைகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.