இளம் தலைவர்களை அறிமுகப்படுத்த போகும் ஐ.தே.கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தலைவர்களை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் இளம் தலைவர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) கூறியுள்ளார்.
கோவிட்டுக்கு பின்ன காலத்திற்கு பொருத்தமான விதத்திலும் நவீன சமூக வலைத்தள பிரசாரங்களுடன் இளம் அரசியல் தலைவர்களை அடையாளம் காண்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார, உப தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
குறிப்பாக எதிர்கால அரசியலின் பிரதான பிரசார ஊடகமான சமூக வலைத்தளத்தை கூடியளவில் பயன்படுத்தக் கூடிய இளம் தலைவர்கள் தொடர்பாக இந்த குழு கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்த உள்ள இளம் தலைவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர் எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.