பிரித்தானிய தடைக்குள் உள்வாங்கப்படாத பொன்சேகா! கேள்வி எழுப்பும் முன்னாள் அமைச்சர்
பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை இலக்குவைத்து தடைகளை விதித்துள்ள போதும், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்புடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்குக்கு தைரியமாக செல்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் தெரிவித்ததாவது,
இராணுவத்துக்கு ஒத்துழைப்பு
“யுத்தக் காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.
அதேபோல் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யுத்தக் காலத்தில் இராணுவ தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார். அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோர் பதவி நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள்.
அவ்வாறாயின் ஏன் சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை.
மனித படுகொலை
1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனித படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளை கொன்று, தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பிக்கிறது.
விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள்.
இவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்த தடையை விதித்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
