ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட இளம் குடும்பப் பெண்: தீவிர நடவடிக்கையில் பொலிஸார் (photos)
வவுனியா - நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று (13.05.2023) பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் நியூட்டன் தர்சினி (வயது 26) என்ற ஒருபிள்ளையின் தாயும், சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) என்ற இளைஞனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பிய போது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதற்கான நவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் தேடப்பட்ட இளைஞர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு முன்பாக சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவரது சடலத்துடன் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை
குறித்த பெண்ணை உயிரிழந்த இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்ததுடன், அந்த பெண் திருமணம் முடித்த பின்னரும் அவருக்கு தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே உயிரிழந்த இளைஞன் இடியன் துப்பாக்கி மூலம் அந்தபெண்ணை கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலங்களை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாரை பணித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்