டுவிட்டர் கொலையாளிக்கு மரணதண்டனையை நிறைவேற்றிய ஜப்பான்
ஜப்பானில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிப்பில் மரணதண்டனை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த குற்றவாளி இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொடூர சம்பவம்
2017இல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020இல் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தவறான முடிவுடன் கூடிய எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவதாக ஜப்பானிய நீதி அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் அத்துமீறல்
பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஷிரைஷி ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார்.
மேலும், 2017ல் பொலிஸார ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.