சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்! முல்லைத்தீவை வந்தடைந்த இளைஞர்
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமூக ஒற்றுமை மற்றும் மனிதாபிமான நன்றியை வலியுறுத்தும் நோக்குடன் சக்கர நாற்காலியின் உதவியுடன் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞரின் பயணம், இன்றைய தினம் (03.02.2026) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்துள்ளது.
வவுனியா சூடுவந்தபுலவு பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி என்பவர், கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி காலை மன்னாரில் இருந்து தனது இந்த விசேட சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்
மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இலங்கை நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டிய அவசியம், குறிப்பாக படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ள நிலை குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அண்மைக்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும், அனர்த்த காலங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இலங்கை மக்கள் ஒருவருக்கொருவர் உதவியுள்ள ஒற்றுமையையும் சமூக நல்லெண்ணத்தையும் எடுத்துரைக்கும் நோக்கிலும் இந்த பயணம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் அன்பு
வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு வரும் மக்கின் முகமது அலி, கடந்த காலங்களிலும் பல்வேறு சமூக செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்த அவருக்கு அப்பகுதி மக்கள் இன, மத பேதமின்றி தாமாக முன்வந்து அமோக ஆதரவை வழங்கியிருந்ததாகவும், பொதுமக்களின் இந்த அன்பும் ஊக்கமும் தன்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்த அவர், சக்கர நாற்காலி சுற்றுப்பயணம் ஆரம்பித்த இடமான மன்னாரில் இன்னும் ஒரு சில தினங்களில் தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.











சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 மணி நேரம் முன்
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam