நாளைய தினம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை
அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாளைய தினம் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறை குறித்தும், கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அமைச்சரவையில் கூட அரசாங்கத்தினால், ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போனது.
அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான சிறிய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன கடும் எதிர்ப்பை முன்வைத்தன.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரச்சினை அதிகரித்த சூழ்நிலையிலேயே கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சர்ச்சைக்குரிய நிலைமை உருவானது.
குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவான முக்கிய பௌத்த பிக்குமார் இந்த துறைமுக நகர சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாத கட்சிகள் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாளை தினம் நடைபெறும் பேச்சுவார்த்தையானது, அரசாங்கத்தின் எதிர்கால இருப்பு தொடர்பில் மிக முக்கியமான பேச்சுவார்த்தையாக இருக்கும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.