தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்: கோவிந்தம் கருணாகரம் சாடல் (Video)
“இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள்.
திருத்தச் சட்டங்கள்
இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரையை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையை பறிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது.
3ஆவது திருத்தச் சட்டம் 6வருடங்கள் ஒரு ஜனாதிபதி ஆட்சியில் இருக்கலாம் என்ற சட்டத்தை மாற்றி ஆட்சி காலத்திலே 4 வருடங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
6ஆவது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களை இந்த சபையில் இருந்து துரத்துவதற்காக கொண்டு வந்த சட்டம்.
13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக பிறப்பிக்கப்பட்ட குழந்தை.
18ஆவது திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்ச அவர்களது அதிகாரத்தை பலப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம்.
19ஆவது திருத்தம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்.
20ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் கோட்டாபயவின் அதிகார வெறிக்கு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம்.
ஆக மொத்தத்தில் இங்கு வருகின்ற திருத்தச்சட்டங்கள் எல்லாம் ஒரு சிலரது விருப்பங்களை அல்லது ஒரு சில கட்சிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் இந்த திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது.
அதேபோல் தான் 22ஆவது திருத்தச் சட்டமும் இந்த சபையில் விவாதிக்கப்படவேண்டிய இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலரது விருப்பத்திற்கு மாறாக இந்த சட்டம் இன்று கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.
13ஆவது திருத்தச்சட்டம்
இந்த சட்டத் திருத்தங்களிலே 13ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் இலங்கையில் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு வரப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டின் அரசாங்களினால் அரசியல் அமைப்பு மீறப்பட்டு கொண்டிருக்கிறது.
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்று வரை வழங்கப்படாமல்
மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களினால் அரசியலமைப்பு மீறப்படுகின்றது” என தெரிவித்தார்.