அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டுள்ள அமைச்சர்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு திடீரென அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான காரணத்தையும் விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கடந்தாண்டு அரசாங்கத்தின் கவனம் கோவிட் -19 தொற்று நோயிலிருந்து மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும், பொது மக்களின் உயிரை பாதுகாப்பதிலும் இருந்தது.
பால்மா, எரிவாயு, சீனி, பருப்பு மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை ஒப்புக்கொள்கின்றேன். 20 மாத காலப்பகுதியில் அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது.
இதன் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
வைரஸிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியதாகவும்,இன்று கொரோனாவின் சவாலை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், படிப்படியாக வருமானம் அதிகரித்து வருகின்றது.
ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் நிலவும் நிலைமை குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.