இந்த அரசாங்கம் பெண்களை உதாசீனம் செய்கின்றது: கீதா குமாரசிங்க
இந்த அரசாங்கம் பெண்களை உதாசீனம் செய்கின்றது என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க(Geetha Samanmale Kumarasinghe) கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எனினும், இன்று என்னை மட்டும் நாடாளுமன்றின் பின் வரிசையில் அமர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இது தொடர்பில் மேலே உள்ள கடவுள் பார்த்துக் கொள்வான், எந்தவொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு.
அன்று கூட்டு எதிர்க்கட்சியை விட்டு சுதந்திரக் கட்சிக்குப் பலர் தாவிய போதிலும் நான் அவ்வாறு செய்யாது கட்சியிலேயே இருந்தேன்.
அன்று கூட்டு எதிர்க்கட்சிக்குக் கறுப்பு பட்டி கொண்டு வரக்கூட எவரும் இருக்கவில்லை, நானே அதனையும் கொண்டு வந்தேன். இன்று ஒரு வேளை சாப்பிடும் மக்களுக்கு மூன்று வேளை சாப்பிட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றேன்.
பட்டினியில் இருக்கும் மக்களது பட்டினியைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சினிமா துறைக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் பின் ஓடும் கலைஞர்களுக்கு இது நல்ல பாடமாக அமையட்டும் என கீதா குமாரசிங்க அரசாங்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.