பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டியதில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த கால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அவை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.டி. நவாஸ் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமால் அபேசிறி, யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதில்லை எனவும், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் பயங்கரவாதத்தை தடுக்க அறிமுகம் செய்துள்ள சட்டங்களை ஆராய்ந்து சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்னும் ஆறு மாத காலப் பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிரந்த சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் விரும்புவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.