தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபருக்கு ஏற்பட்ட கதி: பொலிஸார் நடவடிக்கை (Photos)
மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உட்பட பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள், மற்றும் வீடு உடைப்பு போன்ற 10 திருட்டு சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியாக ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினி, மோட்டார் சைக்கிள் என்பன மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் மோட்டர்சைக்கிள் மற்றும் வீடுகளை உடைத்துத் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டு கொண்டனர்.

சூத்திரதாரி கைது
இதனையடுத்து, சூத்திரதாரி மறைந்திருந்த இடம் தொடர்பாகக் கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.எம்.எஸ். கஜநாயக்கா தலைமையிலான சப்இன்பெக்டர் எம்.எஸ்.எம்.ஷகி பொலிஸ்சாஜன் பிரேமதாச, ஹகுமான், சி.பவிராஜ், எஸ்.மயூரன், திலீபன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்றைய தினம் கிளிநொச்சி பகுதியில் வைத்துக் குறித்த சூத்திரதாரியைக் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருகோணமலை - நிலாவெளியை சேர்ந்த 29 வயதுடைய இவர், கிளிநொச்சியில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் திருகோணமலை, கல்முனையில் மட்டக்களப்பில் பாரதிவீதி மற்றும் றொசாறியா ஆகிய வீதிகளில் இரு மோட்டர்சைக்கிள், உட்பட 5 மோட்டர் சைக்கிள்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்னஉப்போடை, பாரதிலேன், கதிர்காமர்வீதி ஆகியவற்றில் உள்ள 5 வீடுகள் உடைத்துத் தங்க ஆபரணங்கள், மற்றும் கையடக்க தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றை திருடியுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை
மோட்டர் சைக்கிளில் சென்று மட்டு. ஜீவிவைத்தியசாலை பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் போன்ற 10 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் திருடிய தங்க ஆபரணங்களை விற்று மகேந்திர ரக கெப் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு மோட்டர் சைக்கிள், மடிகளணி ஒன்று, 7 கையடக்க தொலைபேசிகள், மற்றும் உருக்கிய நிலையில் ஒரு தொகை தங்கத்தினை மீட்டுள்ளதுடன், திருடிய பணத்தில் வாங்கிய மகேந்திர ரக கெப் வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri