கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி! பொலிஸார் தீவிர விசாரணை
இரத்தினபுரி - எல்லேகெதர பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவி காணாமல்போன சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமது மகள் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.தான் சில விடயங்களால் வெறுப்படைந்துள்ளதாகவும் மாணவி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
அத்துடன் தன்னை தொடர்புக்கொள்ளுமாறு தொலைபேசி இலக்கம் ஒன்றை மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார்.
எவ்வாறாயினும் வீட்டில் இருந்து சென்ற மாணவி, வேறு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து பெற்றோரை தொடர்புக்கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.
எனினும் அந்த தொலைபேசி இலக்கம் தற்போது செயலிழந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடிதத்தில் இருந்த தொலைபேசி இலக்கம் மற்றும் மாணவி தொடர்புக்கொண்ட தொலைபேசி இலக்கம் என்பவற்றின் தரவுகளை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனை தவிர சம்பவம் குறித்து குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், மாணவி காணாமல்போவதற்கு முன்னர் இந்த இளைஞனை தொடர்புக்கொண்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி எல்லேகெதர பிரதேசத்தை சேர்ந்த பிரபல கல்லூரியொன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.