முன்மொழியப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை பத்திரிகை நிறுவகம் அதிருப்தி
முன்மொழியப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை நிறுவக அங்கத்தினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த இலங்கை பத்திரிகை நிறுவனங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பத்திரிகை நிறுவகம் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும், உத்தேச சட்டமூலத்தில் ஊடக சமூகத்திற்குப் பொருந்தாத பல சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளன.
முன்மொழியப்பட்ட யோசனை
முன்மொழியப்பட்ட யோசனையில் 'பயங்கரவாதச் செயல்கள்' என்பது, பரந்த மற்றும் தெளிவற்ற வரையறையைக் கொண்டுள்ளது.
இது கருத்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து முன்மொழியப்பட்ட யோசனையில் உள்ள பரந்த அதிகாரங்கள், பேச்சை குற்றமாக்குகிறது.
மேலும் பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்கும் பொருட்களாக விளங்கக்கூடிய பிரசுரங்களை வெளியிடுபவர்கள், விநியோகிப்பவர்கள், விற்பவர்கள் அல்லது அனுப்புபவர்களுக்கும் இந்த குற்றங்கள் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது.
இரகசிய தகவல்
குறித்த யோசனையின்படி, இரகசியத் தகவல் என்பது தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தத் தகவலாகவும் இருக்கலாம், அதில் பொதுக்களத்தில் இல்லாத எந்தத் தகவலும் அடங்கும்.
எனவே, 'இரகசியத் தகவல்' என்ற பரந்த மற்றும் தெளிவற்ற வகைப்பாடு மற்றும்
குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் பல குற்றங்கள் இப்போது 'பயங்கரவாத
குற்றங்கள்' என மறுவடிவமைக்கப்படுவதால், ஊடகவியலாளர்கள், தமது கடமைகளை
நிறைவேற்றும் போது ஒரு ஆபத்தான நிலையை எதிர்நோக்குவர் என்றும் இலங்கை
பத்திரிகை நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
