தொற்றாளர்கள் குறைந்தாலும் அபாயம் நீங்கவில்லை! சுகாதார அமைச்சு எச்சரிக்கை
"கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை.
எனவே, சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Dr Hemantha Herath) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்திருந்தாலும், இன்னமும் நாளொன்றுக்கு ஆயிரம் வரை தொற்றாளர்கள் பதிவாகின்றனர். அதேபோல நாட்டில் பல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
எனவே, இந்த நிலைமை தொடர்பில் நூறுவீதம் திருப்திகொள்ள முடியாது. வைரஸ் பரவுவதற்கான அவதானம் குறையவில்லை. எனவே, எதிர்வரும் முதலாம் திகதி நாட்டைத் திறப்பதாக இருந்தாலும் அதனைப் படிமுறை ரீதியாகவே செய்ய வேண்டும்.
அதேபோல் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்" - என்றார்.