ஜனாதிபதி அரசியல் ரீதியாக தீவிரமாக தலையிட வேண்டும்! - அமைச்சர் விமல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் அரசியல் ரீதியாக தீவிரமாக தலையிட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal weerawansa) கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டங்கள் போன்ற கூட்டங்களில் ஜனாதிபதியின் பங்கேற்பும் கூட்டாக முடிவெடுப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நான் முன்வைத்த யோசனைகளும் நான் முன்வைக்காக யோசனைகளும் தவறாக விளக்கப்பட்டு பரப்பப்படுவதால் இந்த பதிவில் அது குறித்து விளக்க வேண்டியுள்ளது.
“தற்போதைய ஆட்சியில் பொது மக்கள் எதிர்பார்த்ததைச் செய்யாமல், அவர்கள் எதிர்பார்க்காததைச் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த விடயம் தொடர்வதன் காரணமாக மக்களிடம் எழும் அவநம்பிக்கை மற்றும் விரக்தியைக் கடந்து நம்பிக்கையை விரைவாக நிறுவ வேண்டும்.
நாட்டிற்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை ஆவணங்களை ஒரே நாளில் அமைச்சரவைக்கு கொண்டு வந்து அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அமைச்சரவையில் போதுமான விவாதம் செய்து அந்த அமைச்சரவை ஆவணங்களை சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமானது.
ஜனாதிபதியும் விரைவில் அரசியலில் தீவிரமாக தலையிட வேண்டும். கூட்டு முடிவெடுப்பதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டங்கள் போன்ற கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வதும் அவசியமானது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபடுவது பல பிரச்சினைகளை தீர்க்கும். அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட விடயங்கள் குறித்து நான் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன்,
எனினும், அவற்றை திரிபுப்படுத்தி பரப்புவதைத் தவிர்ப்பதற்காக மட்டுமே இதனை விளக்க விரும்புகிறேன். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அது பாதிக்காது என்று நான் நம்புகிறேன்.” என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.