நீதிமன்ற அவமதிப்பு யோசனை தொடர்பில் விரைவில் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ள அரசாங்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட “நீதிமன்ற அவமதிப்பு” குறித்த தனியார் யோசனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை, அரசாங்கம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரணவக்கவினால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரைவு யோசனையை ஆதரிப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று சப்ரி கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டிருந்த நீதி அமைச்சர், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டம் தேவை என்பதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
ரணவக்கவின், வரைவு யோசனை, நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான தண்டணைகளில், சில நீதிமன்றங்களின் அதிகாரங்களை வரையறுக்கும் நடைமுறைகளை வலியுறுத்துகிறது.
நீதிமன்றத்தை அவமதிப்பது மற்றும் அதற்கு விதிக்கப்படும் தண்டனைகள் பற்றி இலங்கையில் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க நீதிபதிகளின் விருப்பத்துக்கு விடப்படுவதாக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்தியா போன்ற பிற தெற்காசிய நாடுகள் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தண்டனைகள், சட்டங்கள் என்பவற்றை தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வரைவு தயாரிக்கப்பட்டது என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை "நீதிமன்ற அவமதிப்பு" என்றால் எதனை கருத வேண்டும், எதனை கருதக்கூடாது என்பதை விரிவாக விவரிக்கிறது. யோசனையின் கீழ், நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளிகளுக்கு, அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது 10,000 ரூபா அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதேவேளை ரணவக்கவின் யோசனை இப்போது முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாசிப்பு, நீதி அமைச்சரால் செய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், நீதியமைச்சர் தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஆறு மாதங்களை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையும் ரத்தானமையை அடுத்தே இந்த சட்டம் குறித்த யோசனையை தாம் முன்வைத்துள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.