உலக குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட முல்லைத்தீவு குருதிக்கொடையாளர்
உலக குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த யூன் 14 ஆம் நாள் கொழும்பில் நடைபெற்றிருந்தது.
உலக குருதிக்கொடையாளர் கௌரவிப்பினை குருதியின் வகைகளை இனம் கண்ட லான்ரைனரின் பிறந்த நாளான யூன் 14 இல் ஏற்பாடு செய்கின்றனர்.
குருதிக்கொடையாளர்களை கௌரவிப்பதில் சமமான அளவுகோல்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குருதிக்கொடையாளர் நிகழ்விலும் சரி தேசிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வில் சரி இந்த சமமற்ற ஏற்றத்தாழ்வான அணுகுமுறை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக குருதிக்கொடையாளர் தினம்
உலக குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வில் முல்லைத்தீவினைச் சேர்ந்த குருதிக்கொடையாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் எல்லா பாகங்களிலும் உள்ள இரத்த வங்கியின் குருதிக் கொடையாளர்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இரத்த வங்கிகளில் குருதிக் கொடை செய்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் கொழும்பில் நடைபெற்றிருந்த குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் குருதிக்கொடை செய்து வருவோரில் இம்முறை யாரொருவரும் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
யாழில் நடைபெற்ற கௌரவிப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள இரத்த வங்கிகளில் குருதிக்கொடை செய்திருந்தவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தேசிய ரீதியாக நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றொரு குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வாக யூன் 23 ஆம் நாளில் யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியிலும் ஒரு கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள இரத்த வங்கிகளில் தொடர்சியாக குருதிக்கொடை செய்து வருவோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
சான்றிதழும் பரிசும் மதிய போசணமும் கௌரவிப்பின் போது வழங்கப்பட்டு இருந்ததோடு தமக்கான பயண ஏற்பாட்டை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியினர் ஏற்பாடு செய்திருந்ததாக யாழில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வுக்கு முல்லைத்தீவில் இருந்து சென்ற குருதிக்கொடையாளர் ஒருவர் விபரித்திருந்தார்.
சான்றிதழ் வழங்கல்
தொடர்ச்சியாக குருதிக்கொடை செய்து வரும் குருதிக்கொடையாளர்களுக்கும் குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வரும் செயற்பாட்டாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
சிலரது சான்றிதழ்கள் கண்ணாடியால் சட்டகம் செய்யப்பட்டு வேறுபடுத்தப்பட்டு இருந்ததோடு பலரது சான்றிதழ்கள் அவ்வாறு இருக்கவில்லை.
ஆயினும் சான்றிதழ்கள் பொதுவாக கொடையாளி மற்றும் ஏற்பாட்டாளர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.அப்படி இருக்கும் போது வேறுபாடு ஏன் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது.
அதிக தடவை குருதிக்கொடை செய்தவர்களுக்கெனவும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதி கூடிய தடவையாக 53 தடவை குருதிக்கொடையளித்த ஒருவருடன் படிப்படியாக குருதிக்கொடையளித்த தடவைகளின் எண்ணிக்கை குறைந்து செல்லுமாறு கொடையாளர்கள் அரங்கிற்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கியிருந்தனர்.
பத்துத் தடவை குருதி வழங்கியவர்கள் வரையும் குருதிச் சிறுதட்டினை வழங்கியவர்களுமாக விசேடமாக குறிப்பிடப்பட்டு அழைத்திருந்ததும் நோக்கத்தக்கது.
புறக்கணிக்கப்பட்ட குருதிக்கொடையாளிகள்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இருந்து சென்றிருந்த இரு குருதிக்கொடையாளருமே முப்பது தடவைக்கு மேல் குருதிக்கொடை செய்திருந்த போதும் அவர்கள் விசேடமாக குருதிக்கொடையினை எத்தனை தடவை செய்திருந்தார்கள் என விழிக்கப்பட்டு அழைக்கப்படவில்லை.
ஆயினும் முப்பதிலும் குறைவாக கொடையளித்தவர்கள் விசேடமாக குறிப்பிட்டு அழைக்கப்பட்டதானது தம்மை மனவுழைச்சலுக்கு உள்ளாக்கியதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழில் நடைபெற்றிருந்த குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வுக்கு சென்றிருந்த ஒரு குருதிக்கொடையாளரிடம் இருந்த இரத்தவங்கியினால் வழங்கப்பட்ட குருதி கொடையளித்த பதிவேட்டின்படி அவர் 86 தடவை குருதிக்கொடை செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் 48 தடவைகள் குருதிக்கொடை செய்திருந்தாக அந்த பதிவேட்டில் குறிப்புகள் இருக்கின்றன.
அவரை ஏன் சிறப்பாக அழைத்து கௌரவிக்க தவறியிருந்தார்கள் என்ற கேள்வியினை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
அதிக தடவை குருதிக்கொடை
பணி நிமிர்த்தம் பல இரத்த வங்கிகளில் குருதிக்கொடை செய்யும் சூழல் ஏற்பட்டதோடு அதிக தடவை முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் தான் குருதிக்கொடை செய்திருந்ததாக புறக்கணிக்கப்பட்ட குருதிக் கொடையாளியிடம் மேற்கொண்ட வினவலின் போது அறிய முடிகின்றது.
முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள இரத்த வங்கிகளில் குருதிக்கொடை செய்திருப்பதற்கான பதிவேடுகளை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரிடம் வழங்கப்பட்டிருந்த பதிவேட்டின் பதிவுகளின் படி முல்லைத்தீவு 48(13), வவுனியா 22(14),யாழ்ப்பாணம் 10(07), கிளிநொச்சி 02,மட்டக்களப்பு 04 என குருதிக்கொடை செய்திருப்பதையும் குறிப்பிடலாம்.
தவறுகளை திருத்தலாம்
கௌரவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கொடையாளர்களின் முழுமைப்படுத்தப்பட்ட விடயங்களை பெற்றுக்கொண்டு செயற்படுதல் மனவுழைச்சலை ஏற்படுத்தாத கௌரவிப்பாக அமையும் என இது தொடர்பில் சமூக விடய ஆய்வாளருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
தொடர்ச்சியாக குருதிக் கொடையினை செய்து வருவோரை கௌரவப்படுத்தும் போது வழங்கப்படும் சான்றிதழில் எத்தனை தடவைகள் இதுவரை குருதிக்கொடை செய்துள்ளார் என குறிப்பிடுவதும் அவர் குருதிக்கொடை செய்து இரத்த வங்கியின் பெயரை குறிப்பிடுதலும் பொருத்தமானதாக இருக்கும்.
வருடாந்தம் நிகழும் கௌரவிப்பு நிகழ்வுகளில் வழங்கப்படும் சான்றிதழ்களின் போது அவர்களது குருதிக்கொடையின் தடவைகள் இதனால் இலகுவாக எடுத்துக் காட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பத்துத் தடவை குருதிக்கொடை செய்தவரும் ஐம்பது தடவை குருதிக்கொடை செய்தவரும் கொடையளித்தலிலும் சரி கொடையளிப்பதற்காக தன் வாழ்வை வளப்படுத்துவதிலும் சரி சமமாக இருக்க முடியாது என்பதும் இங்கே வெளிப்படை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |