வங்கியில் இருந்து காணாமல் போன பணம் மகிந்தவுக்கு ஒரு துளி நீர் போன்றது
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் காணாமல் போனது என்பது மிகப் பெரிய நீர் தேக்கத்தில் இருக்கும் தண்ணீரில் ஒரு துளியை எடுத்ததை போன்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பிரதமர் இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அவரது தனிப்பட்ட செயலாளர் சில வருடங்களாக கொள்ளையிட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இன்றைய பிரதமர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகின்றார். அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அவருக்கு கிடைத்த சம்பளம் ஒலு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது.
அவர் அந்த வங்கிக் கணக்கை மறந்திருக்கலாம் என நினைக்கின்றேன். அப்படியான வங்கிக் கணக்கு இருப்பதையும் அதில் பணம் உள்ளதையும் அண்மையில் அதனை பரிசோதித்த போதே கண்டுபிடித்துள்ளார்.
வங்கிக் கணக்கில் பெருந் தொகை பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சாதாரண மக்கள் தமது வங்கிக் கணக்கில் 100 ரூபாய் குறைந்தாலும் அதனை கண்டுபிடித்து விட முடியும். எனினும் முன்னாள் ஜனாதிபதியின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக் கணக்கான ரூபாய்களை காணாமல் போயுள்ள நிலையில் அதனை அவர் அறியாமல் இருந்திருக்கின்றார்.
அவர் தனது சம்பளத்தை கவனமாக சேமித்துள்ளார் என்பது தெரிகின்றது. முன்னாள் ஜனாதிபதி தனக்கு கிடைத்த சம்பளத்தில் செய்த சிக்கனத்தை போல், நாட்டின் செலவுகளிலும் செய்திருந்தால், எமது நாட்டின் திறைசேரி செல்வத்தால் நிரம்பி இருக்கும். அப்படி நடந்திருந்தால், உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமான நாட்டை உருவாக்கி இருக்கலாம்.
ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தனது முழு சம்பளத்தையும் சேமித்து சிக்கனமான வாழ்க்கையை நடத்தும் போது, கோடிக்கணக்கான நாட்டின் செல்வத்தை விரயமாக்கியுள்ளார். இதுதான் எமக்கு இருக்கும் கவலை. மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது தனிப்பட்ட செயலாளர் நீண்டகாலமாக திருடி வந்துள்ளார்.
அவரது மகிந்தவின் தனிப்பட்ட உதவியாளர் என்பதுடன் நாடாளுமன்ற விவகார செயலாளர். இந்தளவுக்கு பணம் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது தவறு என அவர் எண்ணி இருக்கலாம்.
தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது பெரிய நீர் தேக்கத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து போன்ற உணர்வு மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கலாம்.
இதன் காரணமாகவே குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யாமலும் சந்தேக நபரை கைது செய்யயும் பணத்தை மீள பெற முயற்சிக்காமலும் இருக்கலாம். இதனால், பெரிய நீர் தேக்கத்தில் ஒரு துளி தண்ணீர் காணாமல் போனது குறித்து எவரும் குழப்பமடைய தேவையில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.