ஊடகங்களினால் அரசாங்கத்தை உருவாக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது – பிரதமர்
ஊடகங்களினால் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற போதிலும் அதனை பாதுகாக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இன்றைய தினம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஊடகங்களினால் அரசாங்கத்தை அமைக்க முடியும், அரசாங்கமொன்றை அதிகாரத்தில் அமர்த்த முடியும். எனினும் ஊடகங்களினால் அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது. ஆளும் கட்சியினால் மட்டுமே அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சித்தால் அவற்றுக்கு பாரியளவு காப்புறுதி தொகை வழங்க நேரிடும். இந்த விடயத்தை ஊடகங்கள் புரிந்து கொண்டுள்ள போதிலும் எம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
தொழில் ரீதியில் சட்டத்தரணிகளுக்கு அடுத்தபடியாக நான் ஊடகவியலாளர்களுடன் அதிகம் பழகியுள்ளேன். ஊடகங்களுக்கு ஏதேனும் ஓர் விடயத்தை மறைத்தால் அது பற்றி மக்கள் அறிந்து கொள்ள கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள்.
இன்று நாடாளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது, ஆனால் எவரும் பார்ப்பதில்லை. ஏனென்றால் அது திறந்த நிலையில் இருக்கின்றது.
அமைச்சரவை கூட்டங்களுக்கு மட்டுமே இன்று ஊடகவியலாளர்கள் செல்வதில்லை. இதனால் அமைச்சரவையில் இடம்பெற்றதாக பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
எமது நெருக்கடியான தருணங்களில் ஊடகங்கள் எம்முடன் இருந்தன. எங்களை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு ஊடகவியலாளர்கள் பெரும்பங்காற்றினர். அவை எம்முடன் இல்லை என இன்று நாம் ஊடகங்களை திட்டுகின்றோம். எனது வாழ்நாளில் இவை அனைத்தையும் பார்த்துவிட்டேன்.
நாட்டுக்கு எதிரான சக்திகள் ஊடகங்களுக்கு தெரியாமலேயே ஊடகங்களை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.