நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்! - அரசாங்கம் அறிவிப்பு
நாட்பட்ட நோய்களால் கண்டறியப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கல் செயற்பாடு, சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் எதிர்வரும் வரும் 27ம் திகதி, இந்த தடுப்பூசி வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகும் அதேவேளை அக்டோபர் 4 முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட 30,000 முதல் 50,000 குழந்தைகள் நாட்பட்ட நோய்களுடன் இருப்பதாகக் கூறிய அமைச்சர், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 17,73,000 சிறுவர்கள் நாட்பட்ட நோய்களுடன் இருப்பதாகவும் கூறினார்.
இவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். நாட்டில் கோவிட் நிலைமை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவதாகவும், தற்போது ஒக்ஸிஜன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒக்ஸிஜன் நுகர்வு தற்போது ஒரு நாளைக்கு 64 மெட்ரிக் தொன்னாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு 134 மெட்ரிக் தொன்னாக இருந்தது.
எனவே இனி இந்தியாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்யத் தேவையில்லை. அடுத்த வாரம் இறக்குமதியை நிறுத்த முடியும் என்று நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 39,000 கட்டில்களில், 16,000 கட்டில்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.