இரண்டு நாட்களுக்கு பணி பகிஷ்கரிப்பு! ஒத்துழைப்பு கோரும் ஆசிரியர் சங்கம்
எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து கொள்வார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) கிழக்கில் உள்ள மண் மாபியாக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே அன்றி அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் ஆசிரியர்கள், அதிபர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அதற்கு ஆசிரியர்கள், அதிபர் ஒத்துழைப்பினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான சாத்வீக போராட்டம் 100ஆவது நாளை அண்மித்துள்ள நிலையில், நாளை 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் எமது போராட்டத்தினை நடத்தி எமது உரிமையினையும் மாணவர்களின் கல்வி உரிமையினையும் பாதுகாக்கும் முகமாக 25ஆம் திகதி 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.
இந்த வகையில் அரசைப் பொறுத்தவரையில் எங்களுடைய போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் அவர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
அதற்கு உதாரணமாக சென் ஜோன்ஸ் கொத்தலாவ சட்ட மூலத்தை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்ட போது நாம் இலவசக் கல்விக்கு எதிராக இந்த செயற்பாடு இருப்பதாகக் கடுமையாக அழுத்தம் கொடுத்த காரணத்தினாலும் இதை தொடர்ந்து ஏனைய சிவில் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காரணத்தினாலும் இன்று அந்த சட்ட மூலத்தை அரசால் நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையைக் கூட உரிய நேரத்தில் இவர்களால் நடத்த முடியாதிருந்த நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தன்னுடைய புலனாய்வு ஒட்டுக் குழுக்களை மையமாக வைத்துக்கொண்டு எங்களை மிகவும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்றார்.
இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாம் இன்று எமது சாத்வீக போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக்கொண்டு இருக்கின்றபோது இன்று காலையிலும் கூட சில ஆசிரியர்கள், அதிபர்கள் எமக்கு தொலைபேசி மூலமாக சில அடிவருடிகள் நாளை பாடசாலை செல்லவேண்டுமென தம்மை அச்சுறுத்துவதாகத் தெரிவித்திருந்தார்கள்.
எனக்கும் தொலைபேசி அச்சுறுத்தல்கள் வந்திருந்தது. எனவே இந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியாமல் எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இன்று வடக்கு - கிழக்கில் உள்ள மக்களின் கல்வி தொடர்பில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டிலிருக்கும் நிலையில் கிழக்கில் உள்ள மண்மாபியாக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்த அமைச்சர் ஈடுபட வேண்டுமேயொழிய அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்தக்கூடாது.
கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை நடத்தியபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர, முடியுமானால் இவர்கள் இந்த போராட்டத்தை நடத்திக்காட்டட்டும் என்று சவால் விட்டிருந்தார். ஆனால் 300 ஆர்ப்பாட்டங்கள் இலங்கை முழுவதும் நடைபெற்றது.
300 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது அவர் உடனடியாக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவகையிலும் தோல்வியடைந்த ஒரு அமைச்சராக இருக்கின்ற அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் வடக்கு - கிழக்கின் மாகாண கட்டமைப்பைச் சீர்குலைக்கும் ஒரு அமைச்சராகவும் அதற்கு அதிகாரத்தை வழங்கக்கூடாது என்று இன ரீதியாகச் சிந்திக்கின்ற இந்த சரத் வீரசேகர அமைச்சர் உடனடியாக அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதோடு, இந்த வடக்கு - கிழக்கு மக்கள் நாளை 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் இவருடைய கட்டளைக்கு அடிபணியாமல் இவருடைய மிரட்டல்களுக்கு அடிபணியாமலும் எந்த விதத்திலும் கவனம் எடுக்காமல் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் முழுமையான பகிஷ்கரிப்பில் ஈடுபட அழைப்பு விடுக்கின்றோம்.
அதேவேளை கடந்த 2 வருடங்களாக இணையம் மூலமாகக் கல்வியைத் தொடர்ந்த 40 வீதமான மாணவர்களுக்கு இந்த அரசினால் எந்தவிதமான உதவியையும் செய்ய முடியாமல் போயிருந்தது.
எதிர்வரும் 25 ஆம் திகதி எமது மாணவர்களின் கல்வி பொறுப்பை மீண்டும் நாங்கள் எடுத்துக்கொண்டு பாடசாலைக்குச் சென்று எமது சாத்வீக போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக நடாத்துவோம் என்பதை உறுதி பூணுகின்றோம்.
தொடர்ச்சியாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டவண்ணம் வெற்றிகரமாக எமது
உரிமை போராட்டத்தை நாங்கள் நடாத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.