இலங்கையின் அரச வங்கியொன்றில் பல பில்லியன் ரூபா மோசடி! அம்பலப்படுத்தும் இந்திய நிறுவனம்
தேசிய அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடயவியல் ஆய்வில் இடைக்கால அறிக்கை தங்களுக்குக் கிடைத்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
இந்த தணிக்கை பணிகள் Deloitte Touche Tohmatsu India LLP என்ற இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் முதற்கட்ட மட்டத்தில் உள்ளதாகவும், ஒப்பந்தத்தின்படி அறிக்கையின் இரகசியத்தன்மை பேணப்படும் என்றும் தேசிய அபிவிருத்தி வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்
எனினும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய, சந்தேகத்திற்குரிய குறித்த கொடுக்கல் வாங்கல்களின் மொத்த மதிப்பு 13,579,664,684 ரூபாய் என வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய அபிவிருத்தி வங்கி இதற்கு முன்னர் ஏப்ரல் 2, 6 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பங்குச் சந்தைக்கு விபரங்களை அறிக்கை செய்திருந்தது.
அத்துடன், இச்சம்பவம் குறித்து எதிர்காலத்தில் தேவைக்கேற்ப மேலதிக விபரங்கள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.