நோயாளர் காவு வண்டி கொள்வனவு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது - ஹர்ஷ டி சில்வா
நோயாளர் காவு வண்டி கொள்வனவு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பத்து நோயாளர் காவு வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக கோவிட்-19 இட்டுகம சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திலிருந்து 19 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட உள்ளமை சந்தேகத்திற்கு இடமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இட்டுகம சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செலவு விபரங்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இதனைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களில் 10 நோயாளர் காவு வண்டிகளுக்காக 19 கோடியே 40 லட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஒரு நோயாளர் காவு வண்டிக்காக 194 லட்சம் ரூபா செலவிடப்பட உள்ளதாகவும் அதில் அப்படி என்ன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை என அவர் குறிப்பிடடுள்ளார்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி கொள்வு செய்யப்பட்ட போது சுமார் 7 மில்லியன் ரூபா வரையிலேயே ஒன்றுக்கு செலவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நோயாளர் காவு வண்டி கொள்வனவு தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை எனவும் சகல விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.