மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தம் - கல்வி அமைச்சர்
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (26.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உணவு வழங்குநர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவைப்பணம் செலுத்த நடவடிக்கை
இந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குநர்களுக்கு உலக வங்கி 87 கோடி ரூபா செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அநுரகுமார மேலும் கூறுகையில்,
"நாட்டில் தற்போது பாடசாலைகளுக்குப் பகல் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு விநியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி வழங்காமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதனால் பாடசாலைகளுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர். உணவு வழங்கப்படாது என்று அரசு தீர்மானிக்காவிட்டாலும் தானகவே அது நிறுத்தப்படும் அபாயம் நிலவுகின்றது.
அதேவேளை, 4 ஆயிரத்து 800 பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. நேர்முகப் பரீட்சையை நடத்தி அவற்றுக்கான அதிபர் நியமனங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்ட போதும் அது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சில கேள்விகளை அரசிடம் எழுப்புகின்றோம். பாடசாலைகளுக்கான உணவு விநியோகத்தை முறையாக முன்னெடுக்க அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? அதிபர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் அதிபர் நியமனங்களை எப்போது செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்கின்றோம்" என்றார்.
மேலதிக செய்தி: ராகேஷ்




