பாதுகாப்புத் தரப்பினருக்கு அடிபணிந்துவிட்டது அநுர அரசாங்கம் : சுமந்திரனின் அறிவிப்பு
2023ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய NPP, தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போது, பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதனையொத்த சட்ட வரைவை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எனும் பெயரில் வெளியிட்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முந்தைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய சட்ட வரைவின் உள்ளடக்கங்கள் குறித்துத் தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்கமைய இந்த வரைவின் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை கடந்த 2023 ஆம் ஆண்டு இருந்த அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையே ஒத்திருப்பதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வேளையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்கும் விஜித ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
அநுர அரசாங்கம்
ஆனால், இப்போது அதன் உள்ளடக்கத்திலிருந்து பெருமளவுக்கு மாறுபடாத புதிய வரைவை அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது என்றும் சுமந்திரன் கரிசனை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி இந்தப் புதிய வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்த பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இந்தப் புதிய வரைவு கூடப் போதுமானதல்ல என முரண்பட்டதாக அறியக் கிடைத்ததாகச் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னிறுத்திய தமது கொள்கையைப் புறந்தள்ளிட்டு, தற்போது அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்த வரைவை வெளியிட்டிருப்பதாகவும் விசனம் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவின் உள்ளடக்கம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர், வெகுவிரைவில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நீதி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பி வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.