மலையகத்தில் பிரத்தியேக பல்கலைக்கழகம் உருவாகும்: கல்வி அமைச்சர்
மலையகத்தில் பிரத்தியேக பல்கலைக்கழகம் உருவாகும் என்றும் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (10.07.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மலையகப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விசேட கலந்துரையாடல்
அதற்கமையவே மலையத்தில் மாத்திரம் சுமார் 3000 இற்கும் அதிகமானோர் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
கடந்த வாரம் கொட்டகலை பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினருடன் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கமைய எமக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகள்
மேலும், மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் போது இந்த பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இதற்காக அமைச்சர் ஜீவன் தொண்டமானது கோரிக்கைக்கு அமைய வெளிநாட்டு நிதி உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். எனவே விரைவில் மலையகத்துக்கான பிரத்தியேக பல்கலைக்கழகமொன்று உருவாகும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |