வன்முறை தாக்குதலுக்கு: கு.சுரேந்திரன் கடும் கண்டனம்
"இன்று காலி முகத்திடலில் அமைதியாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு எமது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறோம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"ஜனநாயக கோரிக்கைகளை ஆளும் தரப்பு எப்படி கையாளுவார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
இந்த ஆட்சியாளர்களிடம் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக எமது கோரிக்கைகளுக்கு நியாமான நீதியான தீர்வை எதிர்பார்க்க முடியாது என்ற முடிவிற்கு தமிழ் மக்களாகிய நாம் வந்த காரணம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
1956 இல் அமைதியாக எமது தலைவர்கள் அகிம்சை ரீதியாக இதே காலி முகத் திடலில் முன்னெடுத்த போராட்டத்தை குண்டர்கள் அராஜகத்தை கட்டவிழ்த்து அப்போதைை அரசு அடக்க முற்பட்டது.
இன்றும் அதையே தனது மக்களுக்கு எதிராகவும் பெருந்தேசிய அரசியல் தலைமை கைக்கொண்டுள்ளது.
ஜனநாயக போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்க முனைவது அப்போராளிகளை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைத்து வன்முறைப் பாதையைத் தெரிவு செய்ய வழிகோலும் அபாயம் ஏற்படும்"எனவும் தெரிவித்துள்ளார்.
May you like this Video