தமிழர் பகுதியில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக அறிக்கை
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட ரீதியிலான அல்லது ஏதோவொரு இடத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினை மாத்திரமல்ல. அது ஒட்டுமொத்த சமுதாயங்களையும் பாதிக்கும் ஒரு சமூக நெருக்கடியாகும்.
பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நாம் துணை நிற்கிறோம். அத்துடன், பெண்களின் வாழ்வும் அவர்களுக்கான பாதுகாப்பும் அவற்றுக்கேயுரிய அவசரத்துடனும், அக்கறையுடனும் கையாளப்படுவதை உறுதிசெய்வதற்கு, அதிகாரிகள், சமுதாய உறுப்பினர்கள், பிரசைகள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு - கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு என்பன இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பில் காணாமல் போன பெண்கள்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலையும், யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவத்தையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த 2026 மார்ச் 20 ஆம் திகதியன்று மட்டக்களப்பில் பதிவான ஆட்கடத்தல், தாக்குதல்கள் மற்றும் கொடூரமான கொலைச் சம்பவங்களின் நிமித்தம் நாம் மிகுந்த கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.

2026 பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஒரு பெண் (46 வயதுடையவர்) கிணற்றில் சடலமாகவும், 2026 மார்ச் 19 ஆம் திகதிமுதல் காணாமல் போயிருந்த இரண்டாவது பெண் (26 வயதுடையவர்) தாக்கப்பட்ட நிலையில் உயிருடனும் மட்டக்களப்பின் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள நெல்லிக்காடு என்ற இடத்தில், அதே கிணற்றில் வீசப்பட்டவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவர்கள் காணாமல் போனமை குறித்து இரு குடும்பத்தினரும் களுவாஞ்சிக்குடி மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். கிணற்றினுள் இருந்து ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவராக, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நிலையில் 26 வயதுப் பெண் காணாமல் போன மற்றொரு பெண்ணின் சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர்
அத்துடன், கடந்த 2026 மார்ச் 19 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டு, 2026 மார்ச் 21 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள தனங்கிழப்பு என்னும் இடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் (54 வயதுடையவர்) கொலை செய்யப்பட்டதையும் மேலும் நாம் இங்கு கவனத்தில் கொள்கிறோம்.
கிழக்கு மாகாணத்தில் பெண்களுடன் நாம் பணியாற்றுவதன் ஊடாக, இத்தகைய சம்பவங்கள் அங்குமிங்கும் இடம்பெறும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல என்பதையும், மாறாக அவை பெண்கள் தம் வீடுகளிலும், உறவுகளிலும், தாம் வாழும், பணிபுரியும் மற்றும் தங்கள் குடும்பங்களைப் பராமரிக்கும் சமூகத்தில் தினமும் எதிர்கொள்ளும் வன்முறையின் ஒரு பரந்த வடிவத்தின் ஒரு பகுதி என்பதை நாம் அறிவோம்.

இந்தத் துயரச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாம் ஒருமைப்பட்டு உடன் நிற்கும் அதேவேளை அவர்களின் துயரத்தில் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியின் தற்போதைய சூழலில், அநேக குடும்பங்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. பெண்கள் நிதி சார்ந்த, உணர்வுகள் சார்ந்த மற்றும் சமூக ரீதியான பல்வேறுபட்ட சுமைகளைச் சுமப்பதோடு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை ஆகியவற்றிற்கான ஆபத்து அதிகரித்த நிலைமைக்கும் முகங்கொடுக்கின்றனர்.
குடும்ப வன்முறை பாதிப்பு
நாம் களத்தில் கண்கூடாகக் காண்பது என்னவெனில், வறுமை, கடன் மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய விடயங்கள் சமூகங்களில் பதட்ட நிலைமையை மோசமாக்குகின்றன என்பதும், அந்த விடயங்கள் பெண்களை மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலைமைக்குள்ளாக்குகின்றன என்பதுமேயாகும்.
இச்சம்பவங்கள் நம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆயினும், இச்சம்பவங்கள் பெண்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் எம்மைப் போன்றவர்களுக்கு, நூற்றுக்கணக்கான பெண்கள் தினமும் தொடர்ச்சியான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றதான வேதனையளிக்கும் நடைமுறையில் உள்ள யதார்த்தமாகக் காணப்படுகின்றது.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழும்போது, "இது நமது சொந்தப் பாதுகாப்பிற்காகத்தான்" எனக் கூறி, பெண்களின் நடமாடும் சுதந்திரம், வேலை செய்வதற்கான சுதந்திரம், மற்றும் தன்னிச்சையாகச் செயற்படும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதே எமது சமூகத்தினதும், குடும்பத்தினதும் மாற்று நடவடிக்கையாக காணப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக மாத்திரமே அமைவதோடு பொதுவெளிகளை அனைவருக்கும் சமமாகப் பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றியமைப்பதில்லை.
பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள்
மேலும், இந்த மாற்று நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவத்தைப் போல, பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளில் பெரும்பாலானவை குடும்பங்களுக்குள்ளேயே நிகழ்கின்றன என்ற உண்மையை புறக்கணிப்பதாக அமைகின்றன. எனவே, நாம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகின்றோம்.
• பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் புகார்கள் மேற்கொள்ளப்படும்போது, பொலிசார் அத்தகைய புகார்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விரைவாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை, பெண்கள் ஏற்கனவே கொல்லப்பட்ட பின்னணிச் சூழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.
• உரிய தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் முழுமையான, வெளிப்படையான மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விசாரணைகளை உறுதி செய்தல் மற்றும் ஆபத்து நிலையில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குதல்.
• அனைத்து ஊடகங்களும் தங்கள் செய்தி அறிக்கைகளில் பெண்களின் கௌரவத்திற்கு மதிப்பளித்தல் வேண்டும் என்பதுடன் அனைத்து பிரசைகளும் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் பெண்களின் கௌரவத்திற்கு மதிப்பளித்தல் வேண்டும் • இந்தக் கொடூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சட்ட நடைமுறை செயற்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டும்.

• சமூக மட்டத்தில் எளிதில் அணுகக்கூடிய உதவிச் சேவைகளை அதிகாரிகள் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும் அதேவேளை பொருளாதாரப் பாதுகாப்பின்மை மற்றும் சமூக ரீதியிலான ஓரங்கட்டப்படுதல் ஆகியன உள்ளிட்ட பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையின் மூல காரணங்களைக் இனங்கண்டு தீர்ப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
• இத்தகைய வன்முறைகளில் பெரும்பாலும் குற்றவாளிகளாக காணப்படும் சிறுவர்கள் மற்றும் ஆண்களுடன் இணைந்து பணியாற்ற, அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வலுவான நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தல் வேண்டும்.
• ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரம், பாதுகாப்பு, கௌரவஷம் மற்றும் எதிர்கால நம்பிக்கை ஆகிய அம்சங்களுடன் வாழ வழிவகை செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட ரீதியிலான அல்லது ஏதோவொரு இடத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினை மாத்திரமல்ல.
அது ஒட்டுமொத்த சமுதாயங்களையும் பாதிக்கும் ஒரு சமூக நெருக்கடியாகும். பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நாம் துணை நிற்கிறோம். அத்துடன், பெண்களின் வாழ்வும் அவர்களுக்கான பாதுகாப்பும் அவற்றுக்கேயுரிய அவசரத்துடனும், அக்கறையுடனும் கையாளப்படுவதை உறுதிசெய்வதற்கு, அதிகாரிகள், சமுதாய உறுப்பினர்கள், பிரசைகள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.