தென்னிலங்கையில் அக்காவின் திருமணத்தில் தம்பிக்கு நேர்ந்த சோகம் - கண்ணீரில் உறவினர்கள்
களுத்துறை, ஹந்தபாங்கொட பிரதேசத்தில் தனது ஒரே சகோதரியின் திருமண தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மணப்பெண்ணுக்கு இவர் ஒரே சகோதரன் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருமண நிகழ்வில் வைக்க புகைப்படம் எடுத்துக் கொண்டு மணமகனின் தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தவறி பள்ளத்தில் விழுந்தது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் முன்னோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பலா மரத்தில் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.