முல்லைத்தீவில் கோட்டாபய கடற்படை முகாமிற்கான நில அளவீட்டு நடவடிக்கை மக்கள் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம் (VIDEO)
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள "கோட்டாபய கடற்படை கப்பல்" முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு முயற்சி பிரதேச மக்களின் எதிர்ப்பால் கைவிடப்படுள்ளது.
பொதுமக்களினால் இன்றையதினம் இவ் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் 617 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர்.
கடற்படை முகாம்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர்.
அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
காணி எடுத்தற் சட்டம்
காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்கி அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
இவ்வாறு காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் இன்றையதினம் (23) மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் 15 காணி உரிமையாளர்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொண்டு காணிகளை கடற்படைக்கு வழங்க இணக்கம் தெரிவித்து அளவீடுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் ஒரு தொகுதி மக்கள் தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவநேசன் ஆகியோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த காணி சுவீகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களை அழைத்து பொதுவான ஒரு கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே காணி உரிமையாளர்களான மக்களை தனியே மாவட்ட செயலகத்துக்கு அழைத்து கூட்டத்தை வைத்து முடிவுகளை எடுத்த பின்னணியில் சில காணி உரிமையாளர்களுக்கு புலனாய்வு தரப்பினரின் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததோடு மேற்குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமும் காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் பிரசன்னமாக்கிருந்ததோடு அதிகளவிலான புலனாய்வாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் கருத்து
தெரிவிக்கையில்,
“மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எந்த அழைப்பும் தராத நிலையில் அவர்களுக்கு விரும்பமும் விருப்பம் இல்லாத நிலையில்தான் இந்த காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுத்த நிலையில் அதனை நாங்கள் தடுத்துநிறுத்தியுள்ளோம்.
மீண்டும் ஒரு தடவை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூட்டத்தினை நடத்தி அதன் பின்னர் எந்த முடிவாக இருந்தாலும் அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
2014 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சம்மந்தமான முதலாவது நடவடிக்கை வர்த்தகமானிமூலம் அறிவிக்கப்பட்டது. அன்றைய சூழல் காணி உரிமையாளருக்கு பொதுமக்களுக்கு அபாயகரமான சூழல் இருந்தது.
மகிந்த ஆட்சிகாலத்தில் போராட முடியாதவாறு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் மக்கள் பயந்து வீட்டிற்குள் இருந்தார்கள். அதன் பின்னர் காணி கோரி போராடிய மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து போராடிவருகின்றார்கள்.
இன்றும் வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் என்று போராடிவருகின்றார்கள். சிலர் இந்த காணிகளை மறைமுக அச்சுறுத்தலில்தான் அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு விரும்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் மனட்சாட்சியின் படி விருப்பம் இன்றித்தான் செய்கின்றார்கள்.
இன்று இருக்கின்ற பொருளாதார சூழல் மக்கள் வறுமையில் இருக்கின்றார்கள் ஏதாவது சொத்துக்களையோ, நகைகளையோ. காணிகளையோ விற்று உயிர்வாழ்வதற்காக விற்று பிளைக்கின்ற நிலமை இருக்கின்றது.
பொருளாதார சுமை
அரசாங்கம் பொருளாதார சுமையினை மக்கள் மீது கொண்டுவந்துவிட்டு மக்களின் ஏழ்மையினை பயன்படுத்தி மக்களின் காணிகளை பறிமுதல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் உடனடியாக காணி அபகரிப்பினை நிறுத்த வேண்டும். கடைசியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐனாதிபதியினை சந்திக்கின்றபோது இந்த காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், காணி அளவீடுகள் செய்வதையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம்.
இவ்வாறு கோரி குறுகியநாட்களுக்குள்ளேயே இந்த அரசாங்கம் அதே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடருகின்றது. இதனை பார்க்கும் போது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. தடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக எங்கள் மக்களின் காணிகளை அரசாங்கம் தொடர்ந்து கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க விரும்புகின்றோம் இல்லையேல் இந்த அரசாங்கம் தொடர்ந்து தமிழ்மக்களின் போராட்ட அழுத்தங்களுக்குள்ளேயே ஆட்சி செய்யவேண்டிய நிலமை உருவாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




