போராட்டத்தில் வெற்றி பெற்ற ரணில் தரப்பு-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் நடந்த மக்கள் போராட்டத்தின் பின்னணியில் மூன்று அணிகள் இருந்தன எனவும் அதில் மூன்றாவது அணி குறித்து தற்போது தகவல்களை வெளியிடப்போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
மூன்றாம் தரப்பு சம்பந்தமான சாட்சியங்கள் என்னிடம் இல்லை. இரண்டு அணிகள் போராட்டத்தின் பின்னணியில் இருந்தன என்பதை நிச்சயமாக கூற முடியும். அதில் ஒரு தரப்பு ரணில் விக்ரமசிங்கவின் தரப்பு என்பதுடன் அந்த போராட்டத்தின் வெற்றி கிண்ணத்தை ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பெற்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளைகள் அறியாமலும் சிலர் அறிந்தும் ரணில் விக்ரமசிங்க போராட்டத்தின் பின்னணியில் இருந்தார்.
ராஜபக்ச குடும்பத்திற்குள் ஒருவரோ அல்லது இருவரோ கோட்டாபய ராஜபக்ச அறியாமல் போராட்டத்தின் பின்னணியில் இருந்தனர்.
தனிப்பட்ட ரீதியில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அடுத்து நாட்டின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த போராட்டத்தின் பின்னணியில் இருந்தார் எனவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.