நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் (Video)
நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துகின்றது. இந்நிலையில் பொலிஸாரினால் தொடர்ந்தும் பல கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
காத்தான்குடி
சக்திவாய்ந்த கைக்குண்டுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்துள்ளார்.
காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்கள்
கைதான நபர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள்,50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட, வீட்டு பாவனைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் கைக்குண்டைக் காண்பித்து மிரட்டிகொள்ளைச் சம்பவத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி:ருசாத்
கிளிநொச்சி
கிளிநொச்சி சோலை நகர் பகுதியில் உள்ளுர் துப்பாக்கிகள் இரண்டுடன் ஒருவர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது.
கிளிநொச்சி புதுமுறிப்பு பிரதேசத்திற்குட்பட்ட சோலை நகர்ப்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து இரண்டு ஊள்ளுர் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசரணைகளை முன்னெடுத்து வரும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: யது
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக சங்கிலித் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேகநபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.
இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.
அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 21 பவுண் தங்க
நகைகளை திருடப்பட்டதாக
பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கமைய உடுப்பிட்டி நாவலடியைச்சேர்ந்த 25 வயதுடைய சந்தேகபரையும் களவாடப்பட்ட 35 லட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதுமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: தீபன்
காங்கேசன்துறை
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் 40 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (24) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரில் ஒருவர் 30 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடனும், மற்றையவர் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மானிப்பாய்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 15 லீசட்டவிரோத மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளவாலை
இளவாலை வீதியில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி:கஜிந்திரன்