உலக நாடுகள் இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி - பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அனைத்து மீளாய்வுகளும் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றுடன் உதவித்தொகையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, சுகாதாரத் துறை, உணவுத் துறை, விவசாயத்திற்கு தேவையான உரம் என்பனவற்றுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என உறுதிமொழி வழங்கியுள்ளார்கள்.
உதவித் தொகை அதிகரிக்கும் போது, பொருளாதாரத் துறைக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். முன்னர் கலந்துரையாடப்பட்ட அனைத்து நாடுகளும் தற்போது இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
எமக்கு தற்போது உள்ள பிரச்சினை இந்த நாட்டின் எரிசக்தி துறைக்கான எரிபொருளை அடுத்த வாரம் பெற்றுக்கொள்வதாகும். வங்கிகளில் டொலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன காரணமாக வேறு வழிகளில் பணம் தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
அத்துடன், 21ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி, அதன் பின்னர் அந்த வரைவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை அமைச்சரவையில் முன்வைப்பதற்காக அனைத்து மீளாய்வுகளையும் நான் பூர்த்தி செய்துள்ளேன், எனவே அது குறித்து இன்று அறிக்கையிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.