பாக்கிஸ்தானில் இலங்கை அணியினரை தாக்கிய நபர் சுட்டுக்கொலை
2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பொலிஸாரால் எதிர்பாராத துப்பாக்கி தாக்குதலில் (என்கவுன்டரில்) கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்பால் அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவில் உறுப்பினராக செயற்பட்டவராவார்.
பொலிஸார் பதிலுக்கு தாக்குதல்
மிகவும் தேடப்பட்டு வந்த இவரை உயிருடன் அல்லது பிணமாக கொண்டுவருபவர்களிற்கு 10.5 மில்லியன் சன்மானம் வழங்குவதாக கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கைபர்-பக்துன்க்வா பொலிஸ் தலைமையதிகாரி- அக்தர் ஹயாத் கான், தேடுதல் ஒன்றின்போது, இக்பால், பொலிஸார் மீது நடத்திய தாக்குதல் நடத்தியபோது பொலிஸார் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இக்பால் 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளில் தேடப்பட்டவராவார்.
கிரிக்கெட் அணி மீதான தாக்குதல்
மேலும், 2009 இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலிலும் இக்பால் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான மற்றும் சமிந்த வாஸ் உட்பட ஏழு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக, பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் மண்ணில் சர்வதேச கிரிக்கட் மற்றும் விளையாட்டுகளை நடத்தமுடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.