யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள்
செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மானிட மகனான யேசு கிறிஸ்து பிறந்த திருநாள் நேற்று (24.12.2025) இரவு 11 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இரவு 11:40 மணியளவில் கிறிஸ்துமஸ் திருப்பலியானது அந்தோனி சாமி பிரான்சிசன் கப்பூச்சியன் சபையின் தலைமையில் இடம்பெற்றது.
திருப்பலியினை தொடர்ந்து சென் பிலிப் நேரி மறைக்கல்வி மாணவர்களால் கரோல் பாடல் இசைக்கப்பட்டது.
கிறிஸ்து பிறப்பு விழாவில் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மருதங்கேணி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி - எரிமலை
முதலாம் இணைப்பு
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
அந்த வகையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் ஆராதனைகள்
இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.
அம்பாறை
அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் யேசுபாலன் பிறந்த தினமாக கொண்டாடப்படும் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடாத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு விசேட ஆராதனை குறித்த தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை (24) இரவு 10.30 மணிக்கு தொடங்கியது.இந்த வழிபாட்டை அம்பாறை தேவாலயத்தின் பாதிரியார் ரோஷன் திசேரா தலைமையில் இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

அம்பாறை நகரத்தைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.அம்பாறையில் உள்ள நவகம்புர கிராமத்தைச் சேர்ந்த இளம் குழந்தைகள் குழு ஒன்று இந்த ஆண்டு தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மாட்டு குகையை கட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதிய உயிர் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பாதிரியார் ரோஷன் திசேரா குழந்தைகளை தேவாலயத்திற்குள் அழைத்து வந்து சிறப்பு நன்றி தெரிவித்தார்.
இதன் போது விசேட பாதுகாப்பு நாடலாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்- பாரூக் ஷிஹான்





