தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த விவாதம், இன்றைய தினம் (01.07.2023) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளது.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு மீதான விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதை இரவு 7.30 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30.06.2023) இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை
அத்துடன் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை வாராந்த நாடாளுமன்ற கூட்டத்தொரை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது.
இதற்கமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆவது பிரிவுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கடந்த நேற்று மாலை வெளியிட்டார்.
இதற்கமைவாகவே விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.
திறைசேரி வழங்கியுள்ள பிணைமுறிகள்
விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குள் அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பு உள்ளடக்கப்படமாட்டாது.
57 மில்லியன் வங்கி வைப்பாளர்களின் நிதி நிலைக்கும் பாதிப்பு ஏற்படாது. அத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பனவற்றின் கடன் மறுசீரமைக்கப்படும்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நிதியம் ஆகியவற்றுக்கு திறைசேரி வழங்கியுள்ள பிணைமுறிகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டு புதிய பிணைமுறிகள் வழங்கப்படும்.
விசேட அமைச்சரவை கூட்டம்
ஆகவே தேசிய கடன் மறுசீரமைப்பால் வங்கி கட்டமைப்புக்கும், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் வழங்கினார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டம் அனுமதி வழங்கியது.
தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் முறைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அமைச்சரவை அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பு திட்ட வழிமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்காக நேற்று முன்தினம்(30.06.2023) வங்கி விடுமுறை வழங்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |