தபால் துறையில் ஊழியர்களின் வரவுப் பதிவு - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் தகவல்
தபால் துறையில் ஊழியர்களின் வரவைப் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று (22.02.2026) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தபால் திணைக்களத்தால் கடந்த ஆண்டில் 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை 15,000 மில்லியன் ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது.
கணினி மயமாக்கல்
மத்திய தபால் பரிமாற்றத்துக்கு 27 மில்லியன் ரூபா செலவில் 209 பாதுகாப்பு கமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கணினி மயமாக்கல் திட்டத்தில் 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டப்லெட் கணினிகளுக்காக 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வரவைப் பதிவு செய்ய 657 கைரேகை இயந்திரங்களை 31 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு, பொலன்னறுவை, தபால் தலைமையகம் மற்றும் மத்திய தபால் பரிமாற்றம் ஆகிய கட்டடங்களில் 24 மில்லியன் ரூபா செலவில் சூரிய சக்தி மின்சாரத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இப்பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.