ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து உருவான ஆறாம் நிலம் திரைப்படம்! பெருகும் ஆதரவு
இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் கடந்த 24 ஆம் திகதி ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் “ஆறாம் நிலம்”திரைப்படம் எமது ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவாகி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த திரைப்படம் முழுநீளத்திரைப்படமாக உருவாக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் விதமாக வெளியாகி எமது உறவுகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதுடன், பார்வையாளர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வருகின்றது.
படத்தின் இயக்குனர் அனந்தராமன் தமிழர்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்கள் குறிஞ்சி ,முல்லை,மருதம் ,நெய்தல், பாலை என ஐவ்வகை நிலங்கள் மட்டுமல்ல. அடுத்தபடியாக ஒரு நிலமும் அதாவது, பாலை எப்படி பயனற்று கிடக்கிறதோ, அதேபோல் கண்ணிவெடிகள் புதைக்கபட்டு எந்த உயிரினமும் வாழத்தகுதியற்ற ஒரு நிலமாக ‘ஆறாம் நிலம்’ இருக்கின்றதாக விறுவிறுப்பான முறையில் இயக்குனர் கோடிட்டு காட்டியுள்ளார்.
ஈழத்தில் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், போருக்கு பின் அங்கே வசிக்கும் மக்களின் நிலையை, இயல்புநிலை மீறாவண்ணம் மிக அழகாக படம்பிடித்து பார்ப்பவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
இந்த படம் ஈழம் தொடர்பாக இதுவரை வந்த படங்களிலிருந்து கதைகளம் தனித்துள்ளதுடன், மேலும் நம்பகத்தன்மையுடன் இயல்பான பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கின்றமை இதன் சிறப்பாகும்.
முதன்மை கதாபாத்திரங்களில் நவயுகா, மன்மதன் பாஸ்கி இருவரும் சிறப்பாக நடித்துள்ளதுடன்,கதை கருவுக்கு உயிரோட்டத்தினையும் வழங்கியுள்ளனர்.
அதிலும் முன்னாள் போராளியாகவும், கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் ஒரு குழுவின் பொறுப்பாளராக பாஸ்கியினுடைய நடிப்பு மிக இயல்பு. ஒரு போராளியை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
கணவனைத் தேடும் பெண்ணாகவும், பிள்ளைக்குத் தாயாகவும், உள்நாட்டு போருக்குப் பின்னரான அத்தனை நெருக்கடிகளையும் சுமந்து கொண்டிருக்கும் அபலைபெண்களின் பிரதிபலிப்பை கண்முன் நிறுத்தியுள்ளார் நாயகி.
கற்பனையாக அப்பாவுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்யும் சிறுமி ஜீவேஸ்வரன் அன்பரசியின் நடிப்பு பல மனங்களையும் கனக்கச்செய்துள்ளதுடன்,
கண்ணிவெடி அகற்றும்போது கை, கால் இழப்புகள் ஏற்பட்டு மரணத்தை தழுவிய தமிழர்களின் சோகத்தை கண் முன் நிறுத்தி சென்றுள்ளது.