அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ளும் சிங்கள மக்கள்:எஸ்.சர்வானந்தன் (Photos)
தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்திய சிங்கள மக்கள் இன்று அதே போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக செய்வதை காணமுடிவதாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் (S.Sarvanandan) தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும், மட்டக்களப்பு மாவட்ட மீனவ அமைப்புக்கள் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 25வது சர்வதேச மீனவ தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கித்துள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று தென்னிலங்கையில் தேங்காய் உடைத்தும், சிங்கள தலைவர்களின் படங்களுக்கு செருப்புமாலை அணிவித்தும் சிங்கள மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்திய சிங்கள மக்களே அந்த சிங்கள தலைவர்களுக்கு எதிராக போராடும் நிலைமையினை நாங்கள் காண்கின்றோம்.
தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடினார்கள். சிங்கள மக்கள் சிங்கள தலைவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுகின்றனர்.
இன்று பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துவருகின்றது. அத்துடன் பசளையினை தடுத்து விவசாயிகள் பாதிக்கும் நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக பெரும்பாலான சிங்கள மக்கள் வீதியிலிறங்கி போராடிவருகின்றனர். இதுவொரு ஆரம்ப நிலையாகவே பார்க்கவேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் எதற்காக பல இழப்புகளை எதிர்கொண்டார்களோ அந்த விடயத்தினை வெற்றி கொள்ளும் வகையில் நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
இப்பகுதியில் பெருமளவான குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்க்கையினை கொண்டு செல்லும் நிலையினை நாங்கள் காண்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சர்வானந்தன் ,
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார் நிலாந்தன், மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மீனவப் பெண்கள் அமைப்பின் அங்கத்தினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



