ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஓருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவில் பணியாற்றி வந்த சிரேஸ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு நபரின் பெயரில் போலி கடவுச்சீட்டு தயாரித்து பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையை மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டு பிரதிநிதித்துவப் பிரிவின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலப்பகுதியில், தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றொரு நபரின் அடையாளத்தை பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை தயாரித்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒருவருக்கு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வசதி செய்து கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட கைது நடவடிக்கை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண்மல் கொடிதுவக்கு, மத்திய குற்றப் புலனாய்வு பணியகப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.