இறுதிப்போரின் உண்மைகளை வெளிக்கொண்டுவர சர்வதேச விசாரணை அவசியம் - கஜேந்திரன் எம்.பி வலியுறுத்தல்
இறுதிப் போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டுவர வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
இன்றையதினம்(02.07.2023) தையிட்டி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
"இன்று யாழில் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தாரோ அல்லது உயிருடன் உள்ளாரோ என எனக்கு தெரியாது.
இதன் போது நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். இருப்பினும் குறித்த விடயம் தொடர்பாக மேல்மட்டங்களுக்கே அறிவிக்கப்பட்டது என கூறியிருந்தார். இதுகுறித்து தங்களது கருத்து எவ்வாறு அமைகிறது" என செல்வராஜா கஜேந்திரனை ஊடகவியலாளர் ஒருவர் வினவியிருந்தார்.
சர்வதேச விசாரணை
இதற்கு பதிலளித்த செல்வராஜா கஜேந்திரன், மைத்திரிபால சிறிசேன பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும், மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருந்த போதும் அவர்களுடைய படைகள் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.
சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி அந்தப் படுகொலைகள் நடைபெற்றிருக்கின்றன.
இவை அனைத்திற்கும் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே நாங்கள் விடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் இறுதிப்போரில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |