ஊடக சந்திப்பை புறக்கணித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார்.
ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (09.11) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்து இருந்தது.
ஊடக சந்திப்பு
இதன்பின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பை கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி நடத்தியிருந்தார்.
ஊடக சந்திப்புக்கு முன்னதாகவே அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதனையும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் பலமுறை கேட்டனர்.
ஆயினும், அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வம் அடைகலநாதன் எம்.பி அங்கிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றிருந்தார்.
ஊடக சந்திப்பில் தனக்கு அருகாமையில் அமர கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சிலரை ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அழைத்த போதும் வேறு எவரும் அதில் கலந்து கொள்ளாது வெளியேறிச் சென்றிருந்தனர்.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என ஊடகப் பேச்சாளர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.