சித்திரவதை செய்யும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து உதவுவதாக குற்றச்சாட்டு
கைதிகளை சித்திரவதை செய்யும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பொலிஸார் உதவிகளை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்து சென்றுள்ள 33 வயதான நபர் ஒருவரினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து பொலிஸார், இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்கி வருவதனை குறித்த நபர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சிறுபான்மை தமிழர்கள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெற்றோல் நிரப்பிய பிளாஸ்டிக்பை ஒன்றை தமது தலைக்கு மேல் வைத்து பொலிஸார் தம்மை கடுமையாக தாக்கியதாகவும், தாம் சுயநினைவு இழந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரும், படையினரும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை சிறுபான்மை தமிழர்களுக்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் உதவி செய்ய விரும்பினால் பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சிவில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இலங்கைக்கு பொலிஸ் பயிற்சி வழங்குவதனை ஸ்கொட்லாந்து நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கான ஓர் ஏதுவாக இலங்கை அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிகளை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸிஸ் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் சித்திரவதைகளை வெள்ளையடிப்புச் செய்யும் உத்தியாக இந்த பயிற்சியை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை பொலிஸார் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதி அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கையுடன் பேணி வரும் தொடர்புகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகள் குறித்த விசாரணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan