ஹிஷாலினியின் அறையில் சிக்கிய மற்றுமொரு தடயப்பொருள்! மரணத்தில் தொடரும் மர்மம்
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி, தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியத்தின் கையெழுத்து ஹிஷாலினியுடையதா என உறுதி செய்து கொள்வதற்கு தேவையான பரிசோதனைகளை முன்னெடுக்க நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் நகர்த்தல் பத்திரம் ஊடாக விடயங்களை முன்வைத்து கோரிய கோரிக்கைக்கு அனுமதியளித்தே, இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
குறித்த கையெழுத்து ஹிஷாலினியினுடையதா என்பதை உறுதி செய்ய அரசின் கையெழுத்து பரிசோதகருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த புடவை துண்டுகள் யாருடையவை என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ரிஷாட் பதியுதீனின் இல்லத்தின் பாதுகாப்பு கெமராக்களை பொலிஸ் சிசிரீவி தொழில்நுட்ப பிரிவினர் இன்று பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் 'என் சாவுக்கு காரணம்' என எழுதப்பட்டுள்ளமை விசாரணைக் குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் காணப்படும் இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுத்தப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் உபயோகித்த பாடப்புத்தகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிசாலினிக்கு ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை.ஏதாவது ஒன்றை பார்த்து கொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது.
ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை என்றும் ஹிசாலினியின் சகோதரரான திருபிரசாத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.