சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல்
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய சதி செய்தமை உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு அமைய 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கின் மேலதிக விசாரணையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சியாளர், நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்ய மற்றொரு திகதியை வழங்குமாறு முறைப்பாட்டு தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த வழக்கில் மேலதிக சாட்சி விசாரணையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
